இந்த க்ஷேத்திரத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் 'திருநவயோகி' என்று பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் 'திருநாவாய்' என்று மருவி வழங்கப்படுகிறது. கோயில் பாரதப்புழை ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தை காசிக்கு சமமானதாகக் கருதி இங்கு சிரார்த்தங்கள் செய்கின்றனர்.
ஒரு சமயம் மகாலட்சுமியும், கஜேந்திரனும் இங்குள்ள செங்கமலத் தீர்த்தத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்து பெருமாளை வழிபட்டு வந்தனர். ஒருமுறை கஜேந்திரனுக்கு மலர் கிடைக்காததால் பகவானிடம் முறையிட, அவர் பிரத்யக்ஷமாகி, லக்ஷ்மியை மலர் பறிக்க வேண்டாம் என்று சொல்லி, தம்முடன் அமரச் செய்து கஜேந்திரனின் பூஜையை ஏற்றுக் கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. மலைநாட்டு திவ்ய தேசங்களில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே லக்ஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது.
மூலவர் நாவாய் முகுந்தன் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயார் மலர்மங்கை நாச்சியார், ஸ்ரீதேவி ஆகிய திருநாமங்களுடன் காட்சி அளிக்கின்றார். லக்ஷ்மி, கஜேந்திரன் மற்றும் நவயோகிகள் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் 2 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 13 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|